ஹைதராபாத்: 9வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் நடந்த நிலையில், ஷார்ஜாவில் நேற்று (அக்.18) நடைபெற்ற 2வது அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது.
இந்தப் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணியினர் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் வீராங்கனைகள் ஜார்ஜியா பிளிம்மர் 33 ரன்களும், சூஸ் பெட்ஸ் 26 ரன்களும் அதிகபட்ச ரன்களாக எடுத்தனர்.
இதனை அடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் களமிறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேற, அந்த அணியின் வீராங்கனை தியேந்திரா டோடின் ஓரளவு போராடி 33 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணியினர் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன், மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதேபோல நேற்று (அக்.18) துபாயில் நடைபெற்ற, மகளிர் டி20 உலகக் கோப்பையின் மற்றொரு அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. மேலும், தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சாளர்கள் திட்டமிட்டபடி பந்து வீசி ஆஸ்திரேலியா அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.