தமிழ்நாடு

tamil nadu

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கால்இறுதிக்கு இந்திய மகளிர் அணி தகுதி! வரலாறு படைத்தது! - paris olympics 2024

By ETV Bharat Sports Team

Published : Aug 5, 2024, 5:37 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய மகளிர் அணி, ரோமானியா மகளிரை 3-க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

Etv Bharat
Etv BharatSreeja Akula and Manika Batra (AP Photo)

பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் விளையாட்டின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய மகளிர் அணி - ரோமானியாவை எதிர்கொண்டது. தெற்கு பாரீசில் உள்ள எரெனாவில் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி, ரோமானியா மகளிரை 3-க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இதில் முதலில் நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அர்ச்சனா காமத் மற்றும் ஸ்ரீஜா அகுலா, 11-க்கு 9, 12-க்கு 10 மற்றும் 11-க்கு 7 என்ற செட் கணக்கில் ரோமானியாவின் எடினா டியாகோனு மற்றும் எலிசபெட்டா சமாரா ஆகியோரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றனர். இந்த வெற்றியி ன் மூலம் இந்திய அணி போட்டியில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 11-க்கு 5, 11-க்கு 7, மற்றும் 11-க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் ரோமானியா வீராங்கனை பெர்னாடெட் சோக்ஸ் என்பவரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். அடுத்தடுத்து இரண்டு வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி புள்ளிப் பட்டியலில் 2-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன்பின் நடந்த மற்றொரு ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்ரீஜா அகுலா தோல்வியை தழுவினார். கடும் போட்டியால் விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 8-க்கு 11, 11-க்கு 4, 7-க்கு 11, 11-க்கு 6, 11-க்கு 8 என்ற செட் கணக்கில் ரோமானியா வீராங்கனை எலிசபெட்டா சமாராவிடம் தோல்வியை தழுவினார்.

இந்த வெற்றியின் மூலம் ரோமானியா மகளிர் அணி புள்ளிப் பட்டியலில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின் நடந்த மற்றொரு ஒற்றையர் ஆட்டத்திலும் இந்தியா அணி தோல்வியை தழுவியது. இந்திய வீராங்கனை அர்ச்சனா காமத், ரோமானியா வீராங்கனை பெர்னாடெட் சோக்சிடம் 11-க்கு 5, 8-க்கு 11, 11-க்கு 7, 11-க்கு 9 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.

இதனால் ஆட்டம் 2-க்கு 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து நடந்த இறுதிச் சுற்றில் இந்திய இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, ரோமானியா வீராங்கனை அடினா டியாகோனுவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் மணிகா பத்ரா 11-க்கு 5, 11-க்கு 9, 11-க்கு 9 என்ற நேர் செட் கணக்கில் அடினாவை வீழ்த்தி, இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற வழிவகுத்தார்.

மொத்தம் நடைபெற்ற 5 ஆட்டங்களில் இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஒட்டுமொத்தமாக போட்டியை 3-க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றி கால் இறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் அணிகள் பிரிவில் முதல் முறையாக இந்திய அணி கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது. இந்திய அணி கால் இறுதியில் அமெரிக்கா அல்லது ஜெர்மனி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஒரே ஆளு 162 நாட்டோட தங்கப் பதக்கங்கள் க்ளோஸ்! யார் அவரு? - Paris Olympics 2024

ABOUT THE AUTHOR

...view details