தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து.. டெஸ்ட் தொடரை வென்று அபாரம்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.

கோலியின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூசிலாந்து வீரர்கள்
கோலியின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூசிலாந்து வீரர்கள் (Credit -AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

புனே:இந்தியா –நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து 259 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதில் சிறப்பாக விளையாடிய கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் விளாசினர்.

இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை, அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 45.3 ஓவர்களில் 156 ரன்னில் சுருண்டது.

அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் டாம் லாதம் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது.

சிறப்பாக விளையாடிய அவர் 86 ரன்களில் (133 பந்து, 10 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. தற்கு அடுத்தபடியாக டாம் ப்ளண்டல் 41 ரன்களும், க்ளென் பிலிப்ஸ் 48 ரன்களும் விளாசினர். இதனால் 255 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சுந்தர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் தனி ஆளாக போராட மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. ரோகித் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் கோப்பை 2024; சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சென்னை மாவட்ட அணி!

கில் 23 ரன்கள், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 ரன்களில் என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். மறுமுனையி தனி ஆளாக போராடிய ஜெய்ஸ்வால் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சை போலவே 2-வது இன்னிங்சிலும் சுழற்பந்து வீச்சாளரன சான்ட்னெர் இந்தியாவின் விக்கெட்டை கொத்தாக கைப்பற்றினார். இறுதி கட்டத்தில் ஜடேஜா (42 ரன்கள்) போராடியும் பலனில்லை.

முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் வெறும் 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக சாண்ட்னெர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் 12 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.‌

சிக்கலில் இந்திய அணி:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ள இந்திய அணி, இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் அடுத்து ஆடும் 6 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற சவாலான நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அணி அடுத்து ஆடவுள்ள 6 போட்டிகளில் 5 போட்டி ஆஸ்திரேலியவுடன் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details