போபால் (மத்திய பிரதேசம்):ஒரு புறம், நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த 'நாம் இருவர், நமக்கு இருவர்' என்பதை அரசு வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகம் மூன்று குழந்தைகளை பெற்றெடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தேசிய அளவில் மகேஸ்வரி சமூகத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மகேஸ்வரி சமூகத்தை சேர்ந்த குடும்பத்தில் மூன்றாவதாக குழந்தை பிறந்தால், மகேஸ்வரி சங்கம் சார்பில் ரூ. 51 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை குறைவால் நடவடிக்கை: அகில இந்திய மகேஸ்வரி சங்கத்தின் மாநாடு சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம், கிஷன்கரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மகேஸ்வரி சமூகத்தினரின் மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான, ஆய்வறிக்கையும் அம்மாநாட்டில் சமர்பித்தனர்.
அதில், நாட்டில் உள்ள மகேஸ்வரி சமூகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரி சமூகத்தினர் 12 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது 8 லட்சம் பேர் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டுள்ள மகேஸ்வரி சமூகத்தின் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, மூன்று குழந்தைகளை பெற்றெடுக்கும் கணவன் மனைவிக்கு ரூ.51 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மூன்று குழந்தை பெற்றால் சிறப்பு மரியாதை: "மூன்றாவதாக குழந்தையை பெற்றெடுக்கும் பெற்றோர்கள் சமுதாய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் அழைத்து கெளரவிக்கப்படுவார்கள்" என்றார் மகேஸ்வரி சமாஜ் மகளிர் பிரிவு செயலாளர் ரிது மகேஸ்வரி.