சென்னை: நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த பட அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய ‘உறவை காத்த கிளி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சிலம்பரசன். ரசிகர்களால் எஸ்டிஆர், சிம்பு என அழைக்கப்படும் சிலம்பரசன் அதற்கு பிறகு ’காதல் அழிவதில்லை’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை அவரது தந்தையும் பிரபல நடிகருமான டி.ராஜேந்தர் இயக்கினார்.
இதனைத்தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், 2004ஆம் ஆண்டு சிலம்பரசன் நடித்த ’மன்மதன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிலம்பரசன் உருவெடுத்தார். இதனைத்தொடர்ந்து 2006இல் சிலம்பரசன் இயக்கி, நடித்த ’வல்லவன்’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் அவரது திரை வாழ்வில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது.
இதனைத்தொடர்ந்து சிலம்பரசன் நடித்த வானம், ஒஸ்தி உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகைகளுடன் காதல், படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை என கோலிவுட்டில் வட்டாரத்தில் சிலம்பரசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இதனிடையே சிம்பு திரைவாழ்வில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில், ’மாநாடு’ திரைப்படம் கம்பேக்காக அமைந்தது. இன்று சிலம்பரசன் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது பட அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.