தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

”கரெக்ட்டா சம்பளம் வந்தது, அதைவிட அதிகமாக மரியாதை”... ’அமரன்’ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு! - AMARAN MOVIE SUCCESS MEET

Amaran Movie Success Meet: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளியான ’அமரன்’ திரைப்படம் 100 நாட்களை கடந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, நேற்று (பிப்.14) சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது.

நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன்
நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் (Credits: Raaj Kamal Films International X Account)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 15, 2025, 5:01 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் தாயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் தான் அமரன். இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக சாய் பல்லவியின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பயோபிக்காக உருவாக்கப்பட்டிருந்தது அமரன் திரைப்படம். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது.

அமரன் தொடர்ச்சியாக 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, படக்குழுவினர், படத்தின் விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரை அழைத்து வெற்றி நேற்று (பிப்.14) விழா நடைபெற்றது.

விழாவில் கமல்ஹாசன் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், ”கமல் சார், எனக்கு ரொம்ப சரியாக சம்பளம் வந்தது சார். ரொம்ப சீக்கிரமே சம்பளம் வந்துவிட்டது சார். இப்படி நடப்பதெல்லாம் அரிதான விஷயம் சார். இந்தக் கதை அன்பு (அன்பு செழியன்) அண்ணனுக்கு எல்லாம் தெரியும்.

என்னுடைய படங்களின் ரிலீஸுக்கு முன்னால் பாதி நேரம் அன்பு அண்ணன் ஆஃபீஸில்தான் இருப்பேன். சம்பளம் கொடுக்காமல் இருக்கறது மட்டும் இல்லாமல், வாங்கிய சம்பளத்தையும் திரும்பி வாங்கிக்கொண்டு போகிற குரூப் இங்கே இருக்கிறது. உங்களுக்கு தெரியாதது இல்லை. நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துதான் வந்திருக்கிறீர்கள். எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது.

எனக்கு படம் ரிலீஸுக்கு ஆறு மாதம் முன்பே சம்பளம் கொடுத்து, அதையும் தாண்டி, மரியாதையையும் ரொம்ப முக்கியமா கொடுப்பதெல்லாம் ரொம்ப அரிதான விஷயம். நீங்கள் எப்படிப்பட்ட நடிகர் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அது உலகத்திற்கே தெரியும். உங்கள மாதிரி நடிக்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும் என சொல்வார்கள். ஆனால் நான் சொல்வேன், இன்னொருவர் பிறந்து வந்தாலும் உங்களைப் போல நடிப்பதற்கு, படம் பண்ணுவதற்கு கண்டிப்பாக முடியாது.

மேலும் எல்லோரும் சொல்வது போல, `விக்ரம்’, `அமரன்’ முடிந்தது, ’தக் லைஃப்’ ஹாட்ரிக் வெற்றி பெறுவதை பார்க்க காத்திருக்கிறேன். உங்களை உலக நாயகன் என அழைக்க வேண்டாம் என சொல்லிவிட்டீர்கள். சரி வேறென்ன சொல்லி கூப்பிடலாம் என நினைக்கும் போது மணிரத்னம், விண்வெளி நாயகன் என சொல்லிவிட்டார். ஏன் உலகம் என சுருக்கி சொல்ல வேண்டும், விண்வெளி நாயகன் என சொல்லிவிடலாம்.” என கமல் குறித்து பெருமையாக பேசினார்.

அதன் பின் சாய் பல்லவி பற்றி சிவகார்த்திகேயன் பேசும்போது, “இந்த படத்தில் சாய் பல்லவிக்கு நான் ஸ்பேஸ் கொடுப்பதெல்லாம் இல்லை. நான் நன்றாக நடிக்கிறேனா, நீங்கள் நன்றாக நடிக்கிறீங்களா என ஒரு நாளும் நான் பார்த்ததில்லை. நீங்கள் நன்றாக நடித்தாலுமே என்னுடைய கதாநாயகி நன்றாக நடிக்கிறார் என்றுதான் நான் பார்ப்பேன். நீங்களோ நானோ ஜெயித்து எதுவும் பண்ண முடியாது, படம் ஜெயிக்க வேண்டும்.

இந்த படத்திற்காக எனக்கு கிடைத்த சிறந்த பாரட்டு என்பது குஷ்பு சொன்னதுதான், ”படத்தில் உங்களுடைய உச்சபட்சமான ஹீரோயிசம் என்ன தெரியுமா சிவா?, நீங்கள் இல்லாமல் பத்து நிமிடம் ஹீரோயின் கதையை கொண்டுபோக அனுமதித்ததுதான் என குஷ்பு பாராட்டினார். அதற்கு நான், “மேடம் அது அனுமதிக்கிறது எல்லாம் இல்லை. அவர் என்னுடைய ஹீரோயின் மேம். நான் இல்லை என்றாலும், அவர் பெர்ஃபாமன்ஸ் பண்ணும் போது நான் அங்கேதான் இருப்பதாக உணர்கிறேன் என சொன்னேன்.

சாய் பல்லவி உங்களுடைய பல பேட்டிகளில் உங்களுடைய காட்சிகள் எல்லாம் அப்படியே வருமா எம டைரக்டரிடம் கேட்டதாக கூறினீர்கள். அப்படியே வரும், அதற்கு ஏற்ற ஹீரோக்கள் இங்கே இருக்கிறார்கள். கமல் சார் படங்கள் பார்த்து வளர்ந்தவர்கள். நீங்கள் கான்ஃபிடெண்ட்டா இருக்கலாம்.” என பேசினார்.

இதையும் படிங்க:இசையமைப்பாளர் தமனுக்கு சொகுசு காரை பரிசளித்து நெகிழ்ச்சியாக்கிய பாலையா

இந்த வெற்றி விழா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் பத்திரிக்கையாளர்கள் யாரையும் அழைக்காதது விமர்சனங்களை பெற்று வருகிறது. அதற்கான தகுந்த காரணங்களும் கூறப்படவில்லை. எனவே பத்திரிக்கையாளர்கள் பலர் தயாரிப்பாளர் கமலஹாசன் மீது விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details