சென்னை: சென்னையில் பால் புதுமையினர் என அழைக்கப்படும் LGBTQIA+ சமூகத்தினர் நடத்தும் ’சென்னை வானவில் திரைப்பட திருவிழா’ (Chennai Rainbow Film Festival) இன்று (பிப்.07) மாலை தொடங்கவுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நேற்று (இப்.07) நடைபெற்றது.
பால் புதுமையினரின் (LGBTQIA+) வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளைச் சித்தரிக்கும் குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் முழு நீளப்படங்கள் ஆகியவற்றை திரையிடுவதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது இந்த திரைப்பட விழா. இதுவரை நடந்த 3 பதிப்பு திரைப்பட விழாக்களில் சுமார் 300 படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
தற்போது இதன் நான்காவது பதிப்பு திரைப்பட விழா இன்று(பிப்.07) தொடங்கி பிப்ரவரி 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னையின் அலையன்ஸ் பிரன்சிஸில் (Alliance Française of Madras) நடைபெற உள்ளது. திரைப்பட விழாவிற்கான செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஷகிலா மற்றும் விழா ஏற்பாட்டாளர் ஷாஷா ஆகியோர் பேசினர்.
செய்தியாளர்களிடம் ஷகிலா பேசுகையில், ”சென்னை வானவில் திரைப்பட திருவிழா ஏற்கனவே 8 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இப்போது நடைபெறவிருக்கும் 4வது பதிப்பு திரைப்பட விழாவை ஷாஷாவினுடைய தலைமையில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் எல்லா நாடுகளிலிருந்தும் 2000 திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு வந்துள்ளன. அதிலிருந்து 55 படங்களை தேர்வு செய்து மூன்று நாட்களாக திரையிடல் நடத்துகிறோம்.
திரையிடப்படும் படங்களுக்கு நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்க உள்ளோம். இது மிகப்பெரிய விஷயம். அனைத்துவகையான மக்கள் போலவே LGBTQIA+ சமூகத்தினரும் அங்கீரங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர்களுக்கென்று தனித்த அங்கீகாரம் கிடைத்ததில்லை. இன்னும் அதிகமாக இவர்களைப் பற்றி வெலியே தெரிய வரும்போதுதான் அவர்களைப் பற்றிய விழிப்புணர்வும் எல்லோருக்கும் கிடைக்கும்” என பேசினார்.