சென்னை: இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் என்றாலே வித்தியாசமான படங்கள் மட்டுமல்லாமல் வித்தியாசமான செயல்களுக்கும் எழுத்துக்கும் பெயர் போனவர். ஒரு விஷயத்தில் அவரது கோணமும் வார்த்தைகளும் வித்தியாசமாகத்தான் இருக்கும். இதனாலயே ரசிகர்களின் பாராட்டுக்கும் கிண்டலுக்கு ஆளாகி வருபவர் நடிகர் பார்த்திபன். ஆனாலும் அவரது வித்தியாச பார்வையை கைவிட்டதில்லை.
நேற்று(பிப்.14) உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பிரபலங்களில் இருந்து சாதரணமானவர்கள் வரை தங்களது காதல் வாழ்த்துகளை இணையத்தில் பகிர்ந்தனர். பல்வேறு புதிய படங்கள் குறித்த அறிவிப்புகள், காதலை மையப்படுத்திய பாடல்கள் உள்ளிட்டவையும் நேற்று வெளியிடப்பட்டன.
இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இளையராஜா இசையில், சீமான் இயக்கத்தில் தான் நடிக்கவிருந்து பின்னர் கைவிடப்பட்ட படத்திற்கு ‘காதல் ஒழிக’ என்று தலைப்பு வைத்ததை நினைவுகூர்ந்து காதலர் தின பதிவாக இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருந்தார் என போஸ்டர் மூலம் தெரிகிறது.
பார்த்திபனின் பதிவில், சமீபத்தில் சீமான் பெரியார் குறித்து பேசியதையும் குறிப்பிட்டு காட்டி எழுதியுள்ளார். மேலும் காதலை குறித்தும் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
பார்த்திபன் எழுதியுள்ள அந்த பதிவில், “காதல் ஒழிக ‘ இன்றைய அரசியலில் தவிர்க்க இயலா கர்ஜனை நண்பர் சீமான் அவர்கள் இயக்க நான் நடிப்பதற்காக கால் நூற்றாண்டுக்கு முன் இதே நாளில் வைக்கப்பட்ட தலைப்பு. படம் கை விடபட்டாலும் நட்பு அப்படியே ஒருவரை ஒருவர் ரசித்தபடி தொடர்கிறது. என் சில கவிதைகளை அவர் சிலாகித்து மேடையில் பாராட்டும் போது அந்தக் கவிதைகளில் உள்ள கருத்து விதைகளில் சில புதூ தளிர்கள் துளிர்க்கச் செய்கிறது. நானும் ஒரு ஒலி வாங்கிப் போல் அவர் பேச்சை மிக அருகில் இருந்து ரசிப்பேன்.