ஹைதராபாத்: பிரபல நடிகை ஜோதிகா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பிரபல நடிகை ஜோதிகா தற்போது தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். ப்ரியதர்ஷன் இயக்கிய பாலிவுட் திரைப்படம் ’Doli saja ke rakhna’ என்ற பாலிவுட் திரைப்படம் மூலம் 1997ஆம் ஆண்டில் ஜோதிகா அறிமுகமானார். ஜோதிகா பிரபல நடிகை நக்மாவின் சகோதரி ஆவார்.
ஜோதிகா தமிழில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த ’வாலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் தமிழ் படத்திற்காக ஃபிலிம் பேர் விருது வென்ற ஜோதிகா, அதற்கு பின்பு ’டும் டும் டும்’, ’குஷி’, ’பூவெல்லாம் உன் வாசம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான சந்திரமுகி, மொழி ஆகிய படங்களில் அவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல், மாயாவி ஆகிய படங்களில் நடித்தார். சூர்யா, ஜோதிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகி இருந்த ஜோதிகா 36 வயதினிலே திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.