ஐதராபாத்:பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில், பாஜக தேசியத் தலைவர் என்ற அடிப்படையில் கடிதம் எழுதாமல், அதை விட முக்கியமாக, நாட்டின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டின் காரணமாக தமிழகத்தில் நிலவும் கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து நாடளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன் கருப்பு பட்டை அணிந்து நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளாச்சாரயத்தால் உயிரிழந்த 55க்கும் மேற்பட்டவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் தகனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி நாட்டை உலுக்கி உள்ளதாகவும், தமிழ்நாடில் இதுவரை இல்லாத அளவாக மிக மோசமான கள்ளச்சாராய சம்பவத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இவ்வளவு பெரிய பேரழிவு நடந்த போதும், உங்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதைப் பற்றி மவுனம் காத்து வருவது தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாகவும் இந்த நேரத்தில், பாஜக மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் இந்தியா கூட்டணியில் உள்ள திமுகவுக்கு கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோருவதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரவும், அமைச்சர் முத்துச்சாமியை அப்பதவியில் இருந்து நீக்கவும் திமுகவுக்கு இந்தியாக் கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஜேபி நட்டா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.