தமிழ்நாடு

tamil nadu

விஜயகாந்த் பாணியில் எதிர்க்கட்சித் தலைவராகும் பவன் கல்யாண்! - Lok Sabha Election results 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 10:27 PM IST

Pawan Kalyan: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பாணியில் நடிகர் பவன் கல்யாண் ஆந்திரா மாநில சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராகும் வாய்ப்பை பெற்றுள்ளார். அவர், தேர்தல் அரசியலில் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

Vijayakanth & Pawan Kalyan
விஜயகாந்த் மற்றும் பவன் கல்யாண் (Credits - ETV Bharat Tamil Nadu & Pawan Kalyan 'X' page)

ஹைதராபாத்: 18-வது மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இதில், ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இதில், தேசிய ஜனநாயக கூட்டணியான (NDA) தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜன சேனா கட்சிகள் ஆரம்பம் முதலே தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 88 தொகுதிகளைக் கடந்து 134 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிப்பதால், ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபுவின் கை ஓங்கியுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 21 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், மக்களவையில் 2 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இதனால் ஆந்திராவின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வாய்ப்பை ஜன சேனா கட்சி பெற்றுள்ளது.

2011-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நிகழ்ந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 29 தொகுதிகளில் வென்றது. இதனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வாய்ப்பை பெற்றார். அதே பாணியில் தற்போது பவன் கல்யாண் ஆந்திராவின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற உள்ளார்.

ஜனசேனா கட்சி வரலாறு: டோலிவுட் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி, கடந்த 2008ஆம் ஆண்டு பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கினார். அப்போது, அவரது தம்பியான நடிகர் பவன் கல்யாண் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து, அக்கட்சியின் இளைஞர் அமைப்பான யுவராஜ்ஜியத்தின் தலைவராகவும் இருந்தார். ஆனால், 2009 தேர்தலில் போட்டியிட்டபோது பவன் கல்யாண் போட்டியிடவில்லை. பின்னர், சிரஞ்சீவி காங்கிரஸில் தனது கட்சியை இணைத்த பிறகு அரசியலில் இருந்து பவன் கல்யாண் ஒதுங்கினார். பின்னர், 2014ஆம் ஆண்டு ஜனசேனா என்னும் கட்சியை அவர் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு.. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தது எப்படி? - AP ELECTION Results 2024

ABOUT THE AUTHOR

...view details