தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 6:45 AM IST

ETV Bharat / bharat

அடுத்த பிரதமர் யார்? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! - Lok sabha Election Results 2024

7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன்.4) நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

Etv Bharat
Representational image (ANI Photo)

டெல்லி:நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மற்றபடி 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஏறத்தாழ 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள நிலையில், இதில் பாஜக மட்டும் தனியாக 441 தொகுதிகளில் களம் காணுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகள் 99 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிரெதிர் அணியிலும் களம் காண்கின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டது. அதேநேரம் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு 200க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

கணிப்புகளை உடைத்து இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன்பின், மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8.30 மணிக்கு எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை 9 மணி அளவில் வெளியாகும். அப்போது முன்னிலை நிலவரம் தெரியும். படிப்படியாக முடிவுகள் வெளியாகி, யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது மாலைக்குள் தெரிந்துவிடும். முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, மின்னணு இயந்திரங்கள் மீண்டும் பாதுகாப்பு அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) கொண்டு செல்லப்பட்டு, அங்கு 45 நாட்கள் பாதுகாக்கப்படும். 6 மாதங்களுக்கு பிறகு, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு, அவை மீண்டும் வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்படும்.

மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் அரசுகளின் பதவிக் காலம் ஜூன் 2ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மீதமுள்ள ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் அதிகாலை 5 மணி முதலே வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவழைக்கப்பட்டு நீண்ட சோதனைக்கு பின்னர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க:LIVE: யாருக்கு மகுடம்? மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் நேரலை! - Lok Sabha Election Results 2024

ABOUT THE AUTHOR

...view details