தமிழ்நாடு

tamil nadu

கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு; 1000 பேரின் நிலை என்ன? மீட்புப் பணிகள் தீவிரம்! - KERALA LANDSLIDE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 12:12 PM IST

KERALA LANDSLIDE : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அட்டமலை பகுதியில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கித் தவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள நிலச்சரிவு மீட்புப் பணியில் படையினர்
கேரள நிலச்சரிவு மீட்புப் பணியில் படையினர் (Credits - ETV Bharat Tamil Nadu)

வயநாடு:கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலைப்பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக நள்ளிரவு 1 மணியளவில் மேப்பாடு முண்டக்கை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு சூரல்மலை என்ற இடத்தில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 70 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மீட்புப்பணிகள் தீவிரம்:நேற்றிரவு முதல் அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மீட்பு குழுவினர் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட மக்களைத் தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் வீடுகள் பல சிக்கியுள்ளன. அதில் இருக்கும் மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நிலச்சரிவு மீட்பு பணிக்காக ஏற்கனவே கோவை மாவட்டம் சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காகச் சென்றுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ராணுவத்தினர் வயநாடு பகுதிக்கு விரைந்துள்ளனர்.

100 குடும்பங்கள்:குறிப்பாக சூரல் மலையை சுற்றியுள்ள ஒரு சில கிராமங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியே வர முடியாத அளவிற்கு சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டு சிக்கித் தவித்து வருகின்றனர். குறிப்பாக அட்டமலை பகுதியில் 100 குடும்பங்கள் சிக்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேப்பாடி பகுதியில் திரும்பும் திசை எல்லாம் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள மாநில முதல்வரிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார்.

தற்போது மாநில மீட்பு குழுவினர் மட்டுமன்றி, ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேப்பாடி சூரல்மலை அருகே நேற்று நள்ளிரவு முதல் காலை வரை, மூன்று முறை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த இடம் கடந்த முறை பெரும் நிலச்சரிவு ஏற்பட்ட புத்துமலை என்ற இடத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூரல் மலையில் 200 வீடுகள் நிலச்சரிவால் புதையுண்டதாக மக்கள் தெரிவித்துள்ள நிலையில் ஆயிரம் பேர் வரை காணாமல் போய் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது பேரிடர் குழு மற்றும் ராணுவத்தினர் சமூக சேவகர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வயநாடு விரைந்த மத்திய அமைச்சர்:இதனிடையே, நிலச்சரிவில் சுமாக் 350 பேர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படும் முண்டக்கை பகுதிக்கு தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். ராணுவ மருத்துவ குழுவும் அங்கு விரைந்துள்ளது. மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியனும் வயநாடு விரைந்துள்ளார்.

இதையும் படிங்க:ராஞ்சியில் ஹவுரா - சிஎஸ்எம்டி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து.. 2 பேர் பலி; 6 பேர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details