திருவனந்தபுரம்:கேரள மாநிலம் உல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் நாயர் (வயது 59). கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) மருத்துவ பரிசோதனைக்காக சென்ற ரவீந்திரன் நாயரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பதறிப் போன அவரது குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூலை 15) காலை அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் லிப்ட் ஆப்ரேட்டர் வழக்கம் போல் லிப்டை இயக்கி உள்ளார். லிப்ட்டை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக லிப்ட்டில் ஒருவர் இருந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் லிப்டில் இருந்த நபர் உல்லூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் நாயர் என்பதும், இரண்டு நாட்களுக்கு முன் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்த போது லிப்டில் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்தது.