டெல்லி: இந்தியாவில் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் மருத்துவப் படிப்புக்கான இளநிலை நீட் தேர்வு இந்தாண்டு கடந்த மே 5ஆம் தேதி வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் உட்பட மொத்தம் 571 நகரங்களில் 4,750 மையங்களில் நடந்தது. சுமார் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர்.
இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு வினாத்தாள் கசிவு, முடிவுகளில் குளறுபடி, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடுகள் போன்ற புகார்கள் எழுந்து பெரும் சர்ச்சையைக் கிளம்பியது. மேலும், நடைபெற இருந்த முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வினை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு நாடு முழுக்க கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இதற்கிடையே, நீட் தேர்வு முறைகேடு குறித்து மத்திய உயர்கல்வித்துறை இயக்குனர் கொடுத்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில், சிபிஐ கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், வருங்காலங்களில் நீட் தேர்வு வெளிப்படையாக, நம்பிக்கையாக நடத்துவதை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்க மத்திய கல்வி அமைச்சகத்தால் உயர்மட்ட நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதில், முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர்கள் உள்ளனர். இந்தக் குழு முதற்கட்டமாக திங்கட்கிழமை அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது.