ஹைதராபாத்: மார்கதர்சி சிட் ஃபண்ட் குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மிதுன் ரெட்டி கூறிய விமர்சனம் சரியானதல்ல, தவறாக வழி நடத்துவது என்று தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த விஜயநகரம் தொகுதி மக்களவை உறுப்பினர் காளிசெட்டி அப்பலா நாயுடு கூறியுள்ளார்.
வெற்றிகரமான செயல்பாடு: இது குறித்து பேசிய காளிசெட்டி அப்பலா நாயுடு, "கடந்த 1995ஆம் ஆண்டு முதன் முதலாக ரூ.50,000 சம்பளம் வாங்கிய போது அதனை கொண்டு மார்கதர்சி சிட் ஃபண்ட்டில் வாடிக்கையாளராக சேர்ந்தேன். முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக சேவையாற்றி வருகிறது. 1996 ஆம் ஆண்டு மார்கதர்சி நிறுவனத்தில் இருந்து சீட்டை எடுத்து கிடைத்த தொகையைக் கொண்டு விவசாய நிலம் வாங்கினேன். மார்கதர்சி சிட் ஃபண்ட் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
2006 ஆம் ஆண்டு மார்கதர்சி சிட் ஃபண்ட் அவதூறு பிரச்சாரத்திற்கு ஆளான போது அப்போதைய காங்கிரஸ் அரசின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஆயிரகணக்கானோர் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தினர். தவறான குற்றச்சாட்டுகளுக்கு இடையேயும், சமுதாயத்தில் மார்கதர்சி சிட் ஃபண்ட் தொடர்ந்து நம்பிக்கையான பெயரைப் பெற்றுள்ளது.
நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி: நம்பிக்கையின் மீது மார்கதர்சி சிட் ஃபண்ட் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மார்கதர்சியை ஆதரித்து வருபவர்களிடம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்பவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். ஈநாடு, மார்கதர்சி சிட் ஃபண்ட் போன்ற அமைப்புகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபடுகின்றனர்,"என்று கூறினார்.
மேலும் பேசிய காளிசெட்டி அப்பலா நாயுடு,"ஒரு கோடிக்கும் அதிகமானோர் தெலுங்குதேசம் கட்சியில் சேர்ந்திருக்கின்றனர். இது கட்சியின் முக்கியமான மைல் கல் ஆகும். ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா தவிர அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளிலும் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 2025 ஆம் ஆண்டு மே மாதம் தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு கடப்பாவில் நடைபெற உள்ளது.
ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள்: கட்சியில் நாரா லோகேஷ் தலைமை திருப்தி அளிப்பதாக உள்ளது. அவரது தலைமையின் கீழ் தான் கட்சியில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் சேர்ந்து மைல்கல் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாரா லோகேஷ் டெல்லியில் மத்திய அமைச்சர்களை தொடர்ந்து சந்தித்து பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அரசின் ஆளுகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு சவால்களுக்கு இடையே ஆந்திர மாநில வளர்ச்சிக்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசானது கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் மாநிலத்தில் தவறாக ஆட்சி புரிந்தது மட்டுமின்றி மாநிலத்தின் வளங்களை கொள்ளையடித்துள்ளது. தெலுங்கு தேசத்தின் தலைமையின் கீழ் அமராவதி மற்றும் மாநிலத்தின் இதர பிராந்தியங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றதற்கு சாட்சியாக இருக்கின்றன. 30 ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்ற விரும்புவதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தது மிகவும் அபத்தமானது,"என்றும் தெலுங்கு தேசம் எம்பி காளிசெட்டி அப்பலா நாயுடு கூறினார்.