டெல்லி: மத்திய டெல்லி பகுதியில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. அந்த வகையில், பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் இயங்கி வரும் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ் தளத்தில் உள்ள நூலகத்தில் மாணவர்கள் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது திடீரென வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வெளியேற முயற்சி செய்வதற்கு முன்னால் வெள்ள நீர் முழுவதுமாக சூழந்துவிட்டதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்புப் படையினர், மோட்டர் மூலம் நீரை உறிஞ்சி சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணியின் போது, இரண்டு மாணவிகள் உள்பட 3 பேர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர், அவர்களது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதனை அடுத்து, பயிற்சி மையத்தில் படிக்கும் சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: டெல்லி யுபிஎஸ்சி கோச்சிங் சென்டர் சம்பவத்திற்கு யார் காரணம்? போலீசாரும், மாணவர்களும் கூறுவது என்ன?
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தனியார் பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை கைது செய்து விசாரித்தனர். இதனிடையே, யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற ராவ் பயிற்சி மைய நிர்வாகம் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளது. இது குறித்து நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயிரிழந்த மாணவர்களான தன்யா சோனி, நெவின் டால்வின் மற்றும் ஸ்ரேயா யாதவ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த இந்த மாணவர்களின் இழப்பு எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நிர்வாகம் முழு ஒத்துழைப்பும் அளித்து வருகிறது" எனக் கூறப்பட்டு இருந்தது. இதனிடையே, பயிற்சி மையத்தின் தரைத்தளத்தை டெல்லி மாநகர நிர்வாகம் சீல் வைத்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:பூட்டப்பட்ட அரசு விருந்தினர் மாளிகை.. காத்திருந்து நடையை கட்டிய மத்திய அமைச்சர்.. கர்நாடகாவில் பரபரப்பு!