பாட்னா : பீகாரில் ஜேடியு - ஆர்ஜேடி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகா ஜேடியு - ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையிலான கூட்டணியை முறிந்தது. இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை மாநில அளுநரிடம் நேற்று (ஜன. 28) நிதிஷ் குமார் வழங்கினார்.
தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த நிதிஷ் குமார், அன்று மாலையே மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை முதலமைச்சர்களாக பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா மற்றும் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும், நிதிஷ் குமாருடன் சேர்த்து 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், நிதிஷ் குமார் தலைமையில் இன்று (ஜன. 29) முதலாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதலமைச்சர்கள் விஜய் குமார் சின்ஹா, சாம்ராட் சவுத்ரி உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி 29ஆம் தேதிக்குள் முடிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக பிப்ரவரி 5ஆம் தேதி மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், புதிய அமைச்சரவையில் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது.