“நான் கஷ்டத்தை கேட்டு படம் பண்றவன்” - நடிகர் யோகி பாபு!
Published : Aug 29, 2023, 8:52 PM IST
சென்னை: பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள ‘லக்கி மேன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஆகஸ்ட் 29) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் யோகி பாபு, இயக்குநர் பாலாஜி வேணுகோபால், ரேச்சல் ரெபேகா, ஷான் ரோல்டன், வீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படம் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிகழ்வில் யோகி பாபு பேசுகையில், “வாழ்க்கையில் அனைவரும் வாய்ப்புக்காக தேடி இருப்போம், ரொம்ப கஷ்டப்பட்டுதான் அனைவரும் வருகிறோம். நான் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த படங்களில் எனது புகைப்படத்தை முதன்மையாக போன்று என்னை வைத்து வியாபாரம் செய்கின்றனர். நான் படம் முழுவதும் நடித்துள்ளதுபோல் காட்டுகின்றனர். இதை தவிர்க்க வேண்டும்.
இதை கேட்டால், நான் படப்பிடிப்புக்கு வருவதில்லை, ஒழுங்காக கால்ஷீட் தருவதில்லை என்று போட்டு என்னை நெகட்டிவ்வாக காட்டி விடுகிறார்கள். இந்த படத்தில் நான் முழு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளேன்” என்றார். மேலும், “நான் கதை கேட்டு படம் பண்ண மாட்டேன், கஷ்டத்தை கேட்டுதான் பன்னுவேன். கடைசி வரை அப்படித்தான் இருப்பேன். என்னால் நிறைய பேர் இயக்குநர் ஆகியுள்ளனர்” என்று கூறினார்.
இவ்விழாவில் பேசிய விநியோகஸ்தர் சக்தி வேலன் கூறும்போது, “மண்டேலா படத்திற்கு பிறகு யோகி பாபுவுக்கு இந்த படம் சிறப்பான படமாக இருக்கும்” என்றார்.