பிரசித்தி பெற்ற புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் - Thoothukudi district news
🎬 Watch Now: Feature Video

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயம். இந்த ஆலயத்தில் விண்ணேற்பு பெருவிழா கரோனா பெருந் தொற்று காலத்தில் 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. பக்தர்கள் அனுமதியின்றி ஆலயத்துக்குள் மட்டும் நடத்தப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு கரோனா தொற்று குறைந்து, இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, ஆலயத்தில் விண்ணேற்பு பெருவிழா சிறந்த முறையில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடம் வீரமாமுனிவர் முதல் பங்கு தந்தையாக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் உள்ள இந்த திருத்தல விண்ணேற்பு திருவிழா இன்று (ஆக.06) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேதகு ஆயர்கள் இவான் அம்புரோஸ், யூஜின் ஜோசப் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஜெபமாலை தோட்டத்தில் இருந்து மக்கள் இசையுடன் இறைமக்களால் கொடி பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி பட்டம் கட்டப்பட்டு இரவு 8 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து, பத்து நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் திருவிழா திருப்பலி நற்கருணை பவனி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை புதுநன்மை விழா நடைபெற உள்ளது. 13ஆம் தேதி காலை மரியன்னை மாநாடும், 14ஆம் தேதி மாலை சிறப்பு ஆராதனை மற்றும் கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக 15 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு திருவிழா திருப்பலியும் தேர் பவனியும் இறைமக்களின் கும்பிடு சேவையும் நடைபெற உள்ளது. இந்த கொடியேற்ற விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.