திருப்பத்தூர்: வாணியம்பாடியில் உள்ள வாரச்சந்தை பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (பிப்.22) சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 2,000 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மக்களுக்கு இலவச எரிவாயு அடுப்புகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர், “மத்திய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய மானியத்தைக் குறைத்து, மாநில ஆட்சியாளர்களின் பெயரைக் கெடுக்க நினைக்கிறார்கள். கீழடி தமிழர்களின் தொன்மையான வரலாற்றை எடுத்துக் கூறுகிறது. 5,300 ஆண்டுகளுக்கு முன் இரும்பு காலம் இருந்தது, அதுவும் தமிழரின் காலம் என்பதை உலகிற்கு அறிவித்தவர் முதலமைச்சர். அவர்தான் இரும்பு மனிதர். அவர் தாய்மொழிக்காக, எவருக்கும் மண்டியிட மாட்டேன் எனக் கூறுகிறார்.
ஆனால், பலர் மத்திய அரசுக்குப் பயந்து மண்டியிட்டு இருக்கிறார்கள். மேலும், நிதி தராமல் தன்மானத்தின் மீது கை வைக்கிறார்கள். பண்பாட்டின் அடையாளம் தான் மொழி. வட இந்தியர்கள் தமிழர்களைப் போல் வேட்டை - சட்டை உடைகளை உடுத்துவது இல்லை. நமது தமிழ்மொழியை அழிக்கப் படையெடுப்பு நடக்கிறது.
மும்மொழிக் கொள்கையில் 3-வது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் கற்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். 500 ஆண்டுகளுக்கு முன் வந்த மொழி இந்தி. 4,000 ஆண்டுகளுக்கு முன் வந்த மொழி தமிழ். பிரதமர் மோடி, தமிழ் பிடிக்கும் எனக்கூறி, ஐநாவில் தமிழ் படிக்கிறார். முன்னொரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதற்கு எதிராகப் போராடியவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர்.
ஆனால், இங்குள்ள சில அரசியல்வாதிகள் என்னும் ஏஜென்ட்டுகள் இந்தி கற்றுக் கொண்டால், வேலைவாய்ப்பு வரும் என்கின்றனர். வடமாநிலத்தவர்கள் உத்திர பிரதேசம், பீகார், டெல்லி, மத்தியப் பிரதேசத்தில் இந்தியைத் தாய்மொழியாகப் பயின்றவர்கள். எல்லாம் தமிழ்நாட்டில் வந்து கொத்தானார் வேலையும், பானிபூரியும், பஞ்சுமிட்டாயும் விற்கிறார்கள்.
திருப்பத்தூர் தொகுதியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டி மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அண்ணன் @evvelu அவர்களால் கட்டுமான பணிகள் துவங்கி வைக்கப்பட்டது. @mkstalin | @Udhaystalin | @arivalayam pic.twitter.com/KZCOL57SOP
— A Nallathambi MLA (@nallathambidmk) February 22, 2025
சமஸ்கிருதம் படித்ததால் மருத்துவராக முடியுமா, வெளிநாட்டில் போய் பொருளாதார வளர்ச்சி அடையமுடியுமா, எனப் பொய்யான கருத்துக்களைக் கூறுகின்றனர். தொடர்பு மொழியைப் படித்ததால் தான் வெளிநாட்டில் சென்று ஆங்கிலம் பேச முடிகிறது. பொருளாதார வளர்ச்சி அடைய முடிகிறது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையில் படித்த அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை நாட்டின் உயர்ந்த நிலைக்குச் சென்றனர். திமுக தேசிய கல்விக் கொள்கையுடன் ஒத்துப்போகத் தயாராக இல்லை.
இதையும் படிங்க: கோவை; தனியார் நிறுவனத்தில் பணிபுரிய ஆயிரம் பெண்களுக்கு பணி நியமன ஆணைகள்!
தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனைத்து நிதியையும் தருவது தமிழக அரசு தான். ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தமிழே தெரியாதவர்களை நியமிக்க ஆளுநர் முயல்கிறார். அதனை எதிர்த்து துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். மும்மொழி கொள்கையால் தமிழனின் அடையாளம் அழிந்து விடும், தமிழைப் போற்றுவோம், முதலமைச்சருடன் துணையாக இருந்து இந்தி திணிப்பை எதிர்ப்போம். இந்தி பேயை ஓட்டுவோம்,” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு திருப்பத்தூர் தொகுதியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கும் பணிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.