வெகுவிமரிசையாக நடைபெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மாசிமகத் தேரோட்டம்! - masi magam therottam tenkasi
🎬 Watch Now: Feature Video

தென்காசி: தென்தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றானதுமான காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மாசிமகத் திருவிழா கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதன் பின்னர் சமுதாய கட்டளைதாரர்கள் சார்பில் தினமும் சுவாமிக்கு அபிஷேக தீபாராதனைகள் உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மாள் வீதி உலா, ஆன்மிகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள், இன்னிசைக் கச்சேரி உள்ளிட்டப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், இன்று (மார்ச் 5) கோலாகலமாக நடைபெற்றது. இதனை ஒட்டி, காலை சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர், உலகம்மன் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். அப்போது பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் தொடங்கியது. காலை 9 மணிக்கு மேல் சுவாமி தேர் முதலில் இழுக்கப்பட்டது.
தொடர்ந்து கோயிலைச் சுற்றியுள்ளள தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, கிழக்குமாசி வீதிகளில் திருத்தேர் வலம் வந்தது. பின்னர், உலகம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும், கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு ‘சிவ சிவ! அரோகரா’ என கோஷங்கள் முழங்கியவாறு,தென்காசி விஸ்வநாதர் ஆலயத் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின், பொடிநடையாக குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனை ஒட்டி ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.