சென்னை: வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை ஏற்றி வந்த 30க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் திருவொற்றியூரில் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டிருந்தன. இது குறித்து பேசிய துறைமுக அதிகாரிகள், "வெடி பொருட்களுக்கான மூலப்பொருட்களுடன் கூடிய கண்டெய்னர் லாரிகள் புனேவில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் இருந்து வந்துள்ளன. இவை மணலி வழியாக சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. முன்னதாக இந்த கண்டெய்னர் லாரிகள் நேற்று முன்தினம் மணலி பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் மீது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பல்வேறு வெளிநாடுகளில் வெடி பொருட்களுக்கான மூலப்பொருடகள் கிடைப்பதில்லை. மேலும் பல்வேறு நாடுகளில் வெடிபொருட்களுக்கான மூலப் பொருட்கள் காரணமாக சூழல் சீர்கேடுகள் நேரிடுவதாக கூறி அதனை தயாரிப்பதில்லை. எனவே, பெரும்பாலான உலக நாடுகள் வெடிபொருட்களுக்கான மூலப்பொருட்களுக்கு இந்தியாவை நம்பி உள்ளன. இந்தியாவில் புனேவில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் இருந்து நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்கள் வழியாக வெடிபொருட்களுக்கான மூலப்பொருட்கள் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதையும் படிங்க: 'கொளுத்தும் வெயில்'... இந்த மூன்று நாட்களில் இன்னும் அதிகமாகும் - வானிலை மையம் தகவல்!
இந்த நிலையில் பல்வேறு வெளிநாடுகளுக்கான வெடிபொருட்களுக்கான மூலப் பொருட்கள் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்வதற்கு புனே ராணுவத் தொழிற்சாலையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகளில் கொண்டு வரப்பட்டன. இவை அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் மணலி கண்டெய்னர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்தன,"என்று கூறினர்.
ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டிருந்ததால் அதில் என்ன இருக்கிறது என்று பொதுமக்கள் மத்தியில் ஆச்சர்யமும், பரபரப்பும் எழுந்தது. இந்த நிலையில் மேலும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் வெடிபொருட்களுக்கான மூலப் பொருட்கள் கண்டெய்னர் லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய போலீசார், "வெடிமருந்து மூலப்பொருட்கள் கொண்ட கண்டெய்னர் லாரிகளால் எந்த பிரச்னையும் இல்லை. ஆபத்தும் இல்லை. பாதுகாப்பாக அவை கொண்டு வரப்பட்டுள்ளன. அதே போல உரிய பாதுகாப்புடன் கப்பலில் ஏற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை,"என்று கூறினர்.