மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா: கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி!
தஞ்சாவூர்: தஞ்சை தென்னக பண்பாட்டு மையம், ப்ரகன் நாட்டியாஞ்சலி பவுன்டேசன் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் ப்ரகன் நாட்டியாஞ்சலி பரதநாட்டிய நிகழ்ச்சிகள் மஹா சிவராத்திரியான 18ந் தேதி அன்று தொடங்கி நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
இன்றுடன் இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நிறைவடைய உள்ள நிலையில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து 51 குழுக்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு தினமும் பெரிய கோவிலில் நந்தி மண்டபத்தில் இசை நாட்டிய அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆறாம் நாளான நேற்று சென்னை அபிநயா வர்ஷினி இசை மற்றும் நடன பள்ளி குழுவினரின் பரத நாட்டியமும், திருச்சூர் மலப்புரம் கலா மண்டலம் வைஷ்ணவி முகுந்தன் குழுவினரின் மோகினியாட்டமும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.