சாலையோர வியாபாரி மீது மோதிய லாரி; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - etv bharat tamil
🎬 Watch Now: Feature Video


Published : Jan 4, 2024, 1:47 PM IST
திருவண்ணாமலை: ஆரணி அடுத்த சேவூர் பகுதி ஆரணி - வேலூர் சாலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை ஆரணி - வேலூர் சாலையில், சாலையோர வியாபாரி ஒருவர் பிஸ்கட் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்பொழுது, வெண்பாக்கம் பகுதியில் இருந்து வேலூருக்கு சாலை அமைக்க தார் ஏற்றிச் சென்ற லாரி வேகமாக வந்துள்ளது.
அப்போது, எதிர்பாராத விதமாக சாலையில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வியாபாரியின் மீது லாரி மோதி உள்ளது. லாரி மோதியதும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு எழுந்ததால், வியாபாரி ஒரு நொடியில் உயிர் தப்பி உள்ளார். அதனைக் கண்ட அருகில் இருந்தோர் உடனடியாக வியாபாரியை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அறிந்த ஆரணி கிராமிய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அருகே இருந்த ஒரு கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது ஆரணி அருகே சாலையோர வியாபாரி மீது, லாரி மோதி வியாபாரி உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.