Published : Oct 30, 2023, 11:36 AM IST
தமிழகத்தில் சினிமா கலாசாரம் பெரிதாக இருக்கிறது... எல்லாவற்றையும் பெரிதாக்குவார்கள்" - சுப்பிரமணிய சாமி!
சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கேரளாவில் வெடி குண்டு வெடித்த சம்பவத்தை பார்த்தால் எச்சரிக்கை மாதிரி இருக்கு. சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர். சம்பவத்தை முஸ்லீம் பயங்கரவாத அமைப்பு தான் செய்து இருக்கும்.
வெளிநாட்டில் நடக்கும் சம்பவங்களை கண்டித்து இங்கே ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடக்கும் போராட்டத்தில் இந்தியாவில் ஏன் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். சர்வதேச மனபான்மை முஸ்லீம்களிடம் அதிகமாக உள்ளது. இதை கட்டுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அரசு, போலீஸ் பலமாக இருந்தால் வெடிகுண்டு சம்பவங்கள் நடக்காது. ஆளுநர் மாளிகை சம்பவத்தை பெரிதாக எடுத்து கொள்ளக் கூடாது. தமிழகத்தில் சினிமா கலாசாரம் பெரிதாக இருக்கிறது. எல்லாவற்றையும் பெரிதாக ஆக்குவார்கள். வெடிகுண்டு சம்பவத்தை ஒரு பைத்தியம் செய்து இருக்கிறது. வெடிகுண்டு வீச்சு சாலையில் நடந்து உள்ளது ராஜ் பவனிற்குள் வீசவில்லை" என்றார்.