கழுதையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம்.. கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Aug 30, 2023, 9:16 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/30-08-2023/640-480-19394471-thumbnail-16x9-tut.jpg)
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் குடியிருக்க இடம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பல முறை மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.
இதனையடுத்து உடனடியாக தகுதி உள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி தாலுக்கா அலுவலகம் முன்பு கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இளையரசனேந்தல் கிளை செயலாளர் இன்னாசி முத்து முன்னிலை வகித்தார்.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கருப்பன், நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், கோவில்பட்டி நகர செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், தாலுகா உதவி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 47 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.