திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி! 24வது முறையாக நிரம்பிய ஆண்டியப்பனூர் நீர்தேக்கம்! - திருப்பத்தூர் மழை
🎬 Watch Now: Feature Video
Published : Sep 27, 2023, 2:25 PM IST
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் 24வது முறையாக நிரம்பியுள்ளது.
தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாகத் ஆண்டியப்பனூர் நீரோடை தேக்கம் திகழ்கிறது. இந்த நீர்த்தேக்கமானது திருப்பத்தூரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் ஆண்டியப்பனூர் பகுதியில் உள்ளது. 27.38 கோடி ரூபாய் செலவில் 2007 ஆம் ஆண்டு கொட்டாறு மற்றும் பெரியாறு ஆறுகளுக்குக் குறுக்கே 8 மீட்டர் உயரத்துக்கு ஆண்டியப்பனூர் நீரோடை தேக்கம் கட்டமைக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதனால் ஆண்டியப்பனூர் அணை அதன் மொத்த கொள்ளளவான 112.20 மில்லியன் கன அடியை எட்டி உள்ளது.
இந்த அணை மூலம் 14 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு அதன் மூலம் 2 ஆயிரத்து 55 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் கால்வாய் மூலம் நேரடியாக 2 ஆயிரத்து 970 ஏக்கர் புஞ்சை நிலமும், 2 ஆயிரத்து 55 ஏக்கர் நஞ்சை நிலம் என மொத்தம் 5 ஆயிரத்து 25 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் தற்போது 24வது முறையாக இந்த அணை நிரம்பி அதன் மொத்த கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து உபரி நீரானது வெளியேறி வருகிறது. இந்த நீர் சின்னசமுத்திரம், வெள்ளேரி, மாடப்பள்ளி ஏரி வழியாக 2 கிளைகளாக பிரிந்து செல்கிறது. ஒரு கிளை செலந்தம்பள்ளி, கோனேரிகுப்பம், கம்பளிகுளம், முத்தம்பட்டி, ராட்சமங்கலம், பசலிகுட்டை ஏரி வழியாக சென்று பாம்பாற்றை அடைகிறது. மற்றொரு கிளை கணமந்தூர், புதுக்கோட்டை ஏரி வழியாக திருப்பத்தூர் பெரியேரி நிரப்பி அங்கிருந்து பாம்பாற்றை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.