விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டநந்தல் கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கோடை காலத்தில் ஏற்படும் மின்பற்றாக்குறையை சமாளிக்க கூடுதலாக 500 மெகாவாட் கொண்ட மின்மாற்றி கடந்த மார்ச் மாதம் வைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்தும் இதுவரை இந்த மின்மாற்றி பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதனால் இந்த பகுதியில் தொடர்ந்து மின்பற்றாக்குறை ஏற்பட்டு, அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மின்துறை அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி இளைஞர்கள் மின்மாற்றியில் நினைவஞ்சலி போஸ்டரை ஒட்டி மாலை அணிவித்தனர். இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில், இந்த மின்மாற்றி தற்போது சரிசெய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க...மின்மாற்றிக்கு நினைவு அஞ்சலி செலுத்திய இளைஞர்கள்!