வேலூர்: குடியாத்தம் அடுத்த உள்ளிபகுதியைச்சேர்ந்தவர் இளைஞர், ஸ்ரீகாந்த் (33). பி.சி.ஏ பட்டப்படிப்பு முடித்தவுடன் சென்னையில் சினிமா இயக்குநராகும் கனவுடன் சில நாள்கள் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு குடும்பச்சூழ்நிலை காரணமாக ஸ்ரீகாந்த் சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றங்கரையில் இருந்த வனப்பகுதி சில சமூக விரோதிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டு இருந்தது.
அதை மீண்டும் உருவாக்கும் கனவோடு முதலில் சாலை ஓரங்களில் மரங்களை வைத்த ஸ்ரீகாந்த், பின்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுமார் 7ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, அங்கு குறுங்காடு வளர்த்து வருகிறார்.
இந்தச்செயலை பாராட்டும் விதமாக கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற 76ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்நாட்டில் சிறந்த இளைஞருக்கான விருதை முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்ரீகாந்துக்கு வழங்கினர். மேலும், ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கி கௌரவித்துள்ளார்.
தொடர்ந்து ஸ்ரீகாந்த் பேசுகையில், “வேலூர் மாவட்டத்தில் குக்கிராமத்தில் நான் செய்த இந்த சேவையைப் பாராட்டி அரசு எனக்கு விருது வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து பல்லாயிரம் மரங்களை வளர்ப்பதே எனது நோக்கம். இதற்கு, அரசு வழங்கிய விருது எனக்கு ஊக்கம் அளிக்கும்” என்றார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர இடங்களைத்தேர்வு செய்வது எப்படி?