வேலூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதியில் நியாய விலைக் கடையும், பெண்களுக்கான நூலகமும் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், தொழிலாளர்கள் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபிலிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
கோரிக்கையை ஏற்று வாணியம்படி பகுதியில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடையும், நூருல்லா பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலக வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் செலவில் பெண்களுக்கான புதிய நூலகமும் கட்டப்பட்டது.
கட்டிடத் திறப்பு விழாவில் அமைச்சர் நீலோபர் கபீல் கலந்துகொண்டு புதிய நியாயவிலை கட்டிடத்தையும், நூலகத்தையும் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினர்.
அதேபோன்று, தற்போதைய தமிழ்நாடு அரசும் பெண்களின் மேம்பாட்டிற்காக பல நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. பெண்களின் கல்விக்காக நமது கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பெண்கள் அறிவுமிக்கவராக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவிகளும் சான்றோர்கள் எழுதிய அனைத்தையும் படித்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நடந்து முடிந்த தேர்தல்களில் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றிபெற்றனர். திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் பொய்யான வாக்குறுதிகள் என்று மக்கள் தற்போது புரிந்துகொண்டார்கள்.
எனவே விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் மட்டுமல்ல, இனி வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக 100 விழுக்காடு வெற்றிபெறும் " என்று கூறினார்.
இதையும் படிங்க:கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!