வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியில் பல தலைமுறைகளாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இருந்த இடத்தை சிறிய கரும்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து பட்டா போட்டுள்ளார். இந்த நிலம் கரும்பூர் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பொது இடமாகவும், இப்பகுதி மக்களுக்கு விளையாட்டு திடலாகவும் பல தலைமுறைகளாக உள்ளது.
இந்நிலையில், திடீரென ஒருவர் நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து வட்டாச்சியரிடம் ஊர் பொதுமக்கள் பல மனுக்கள் கொடுத்துள்ளனர். இதை எந்த ஒரு அலுவலரும் கண்டு கொள்ளாததையடுத்து, கரும்பூர் கிராம மக்கள் இன்று கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்த போது கூட்டத்தில் ஒருவர் இந்த முறையும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அலுவலர் கிராம மக்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து தேர்தல் முடிந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாக அலுவலர் உறுதியளித்தப்பின் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.