திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல், இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலில் மணப்பாறை, வையம்பட்டி, மணிகண்டம், அந்தநல்லூர், திருவரம்பூர், மருங்காபுரி உள்ளிட்ட 6 ஒன்றியங்களுக்கும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. ஆனால் விதிமீறி அந்தநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட 10-ஆவது வார்டு மல்லியம்பத்து பகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் நேரு பரப்புரையில் ஈடுபட்டார்.
இதை அறிந்த அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரின் ஆதரவாளர்கள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோர் நேருவின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் விதிமீறி பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் துணை மேயர் அன்பழகன், திமுக வேட்பாளர் கதிர்வேல் ஆகியோர் மீது சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தேர்தல் அலுவலர் ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் ' - திமுக குற்றச்சாட்டு