திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் அருகே பரமசிவம்பாளையத்தில் ராசான் காடு பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர், தனக்கு சொந்தமான 32 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஒரு வீட்டில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜய் பார்ஜோ என்பவர் தனது மனைவி சிபானி பார்ஜோவுடன் ரூபாய் 1,500 வாடகை செலுத்தி தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வேலையின்றி வருமானம் இழந்து வாழ்வாதாரம் பாதித்து உணவுக்கே போராடிவரும் நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை காத்து உதவிடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் வழங்கிவருகின்றது.
அதோடு, வாடகைக்கு குடியிருக்கும் தொழிலாளர்கள் வருவாய் இழந்து வாடும் நிலையில் அவர்களிடம் வாடகை கேட்டு துன்புறுத்துவதோ, வாடகை தரவில்லை என்று சொல்லி வீட்டை காலிசெய்யச் சொல்வதோ கூடாது என வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருந்து.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் பாலசுப்பிரமணியம், அவரது மனைவி புஷ்பா, அவரது மருமகன் செந்தில் என மூவரும் வீட்டு வாடகை கேட்டு இன்று பிஜய் பார்ஜோ, அவரது மனைவி சிபானி பார்ஜோ ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மேலும், வாடகை கொடுக்காததால் உடனடியாக வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக சிபானி பார்ஜோ பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 341, 294 (b), 323 என்ற மூன்று பிரிவுகளில் மூன்று பேர் மீதும் பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: குன்னூரில் கரோனா கணக்கெடுக்கும் பணிகள் தொய்வு!