தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் வடிவு அம்மாள். இவரது கணவர் சுந்தரம் கடந்த 2009 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் தனது இரண்டு மகன்கள், ஒரு மகளுடன் வாழ்ந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுக்கும், மூத்த மகன் துரைக்கும் திருமணம் முடித்து வைத்தார். மூத்த மகன் துரை தாய் வீட்டுக்கு அருகிலேயே மனைவி, 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி வெங்கடேஸ்வராபுரம் 6ஆவது வார்டு உறுப்பினர் ஜெயக்குமார் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் வடிவு அம்மாவின் மூத்த மகன் துரையும் சம்பந்தப்பட்டிருக்கிறார் எனக் கூறி அவரை காவல் துறையினர் தேடியுள்ளனர்.
அவர் கிடைக்காததால் அவர் தம்பி மகேந்திரன்(28) தேடினார். கட்டட வேலைக்காக நெல்லை மாவட்டம் பாப்பாங்குளத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்த மகேந்திரனை மே 23 ஆம் தேதி நள்ளிரவு சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ரகு கணேஷ் தலைமையிலான காவல் துறையினர் அடித்து இழுத்து வண்டியில் ஏற்றிவந்துள்ளனர்.
பின்னர் மே 24 ஆம் தேதி மதியம் உடல் முழுவதும் காயங்களுடன் மகேந்திரனை வீட்டிற்கு மிரட்டி அனுப்பியதாக அவரது ஊர்க்காரர்களால் கூறப்பட்டது. வீட்டிற்கு வந்த மகேந்திரன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து ஜூன் மாதம் 11ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரது சகோதரி உதவியுடன் மகேந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜூன்13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மகேந்திரன் உயிரிந்தார். மகேந்திரன் உயிர் இழந்த பிறகும் காவல் துறையின் அச்சுறுத்தல்களை சந்தித்ததால் உடற்கூறாய்வு செய்யப்படாமல் அவரது உடல் சமுதாய முறைப்படி எரியூட்டப்பட்டது.
இந்த நிலையில் மகேந்திரனின் ஒரே சகோதரர் (அண்ணன்) துரை கடந்த மே 18 ஆம் தேதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கொலை சம்பவத்தில் காவல் துறை தாக்கல் செய்த நபர்களில் குற்றவாளியாக துரை பெயர் சேர்க்கப்படவில்லை. இருந்தும் அவர் இன்றும் சிறைச்சாலையில் இருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில் சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த சம்பவத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதை தொடர்ந்து சிபிசிஐடி, சிபிஐ விசாரணைகளும் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டன.
இதனையறிந்த வடிவு அம்மாள் சாத்தான்குளம் வியாபாரிகள் காவல் துறையினரால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது போலவே தன்னுடைய மகனும் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.
எனவே எனது மகனுடைய இறப்பு சம்பவத்தையும் நீதிமன்றம் விசாரித்து நீதி வழங்க வேண்டும் என கோரி தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழியாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றம் இலவச சட்ட ஆலோசகர் ஒருவரை வடிவு அம்மாளுக்கு நியமித்து உத்தரவிட்டிருந்தது. இந்தச் சூழலில் வடிவு அம்மாளுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ராமசாமி ஆஜராவதற்கு முன்வந்துள்ளார்.
பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சாத்தான்குளம் வியாபாரிகள் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது போலவே வடிவு அம்மாளின் மகன் மகேந்திரனும் கொலைசெய்யபட்டுள்ளார்.
இது மறைக்கப்பட்ட கொலையாகும். மகேந்திரனின் இறப்பினைத் தொடர்ந்து அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அருண் பாலகோபாலனிடம் மகனின் சாவுக்கு நீதி வேண்டி வடிவு அம்மாள் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அருண் பாலகோபாலன் வடிவு அம்மாளின் புகார் மனுவை பொருட்படுத்தாமல் தூக்கி வீசி எறிந்து உள்ளார்.
எனவே இந்த சம்பவத்தில் வடிவு அம்மாளின் வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலனை முதல் எதிரியாக சேர்த்துள்ளோம். பாதிக்கப்பட்ட வடிவு அம்மாளின் குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்பதற்காக மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம்.
அதன்பேரில் மனுவை பரிசீலித்த நீதிமன்றம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது. அதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் விரைவில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.