திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கூலி தொழிலாளியான இவரது மனைவி சசிகலா (22). இவர்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், சசிகலா மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், நேற்று (ஜன. 20) சசிகலாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் இவரை செங்கம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். அப்போது, வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சென்ற சிறிது நேரத்திலேயே சசிகலாவிற்குப் பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து, ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளரான வசந்தி, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
சிறிது நேரத்தில் சசிகலாவிற்கு ஆம்புலன்சிலேயே சுகப் பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, இளம்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தாயும், குழந்தையையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் நலமுடன் உள்ளனர்.