திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் மாற்றுக்கட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்று மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்குச் சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், பாமகவின் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு போராட்டம் சீட்டுக்கும், நோட்டுக்குமான பேரத்திற்கு மட்டுமே என விமர்சித்தார்.
வன்னியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வழக்குத் தொடுத்து இட ஒதுக்கீடு கிடைக்க உள்ள நிலையில், வழக்குத் தொடுத்தவர்களுக்குப் பெயர் கிடைத்துவிடும் என்பதாலும், தேர்தல் வரை தமது கட்சித் தொண்டர்களைத் தக்கவைக்கவே ராமதாஸ் போராட்டம் நடத்திவருவதாகவும் வேல்முருகன் குற்றம் சாட்டினார்.
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுகிறது எனக் குற்றம் சாட்டினார். மருத்துவ மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையிலும் துணிந்து சட்டம் இயற்றியதுபோல ஏழு தமிழர்களை விடுவிக்கத் தமிழ்நாடு அரசு தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு ஏன் விடுவிக்கவில்லை என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
மாநிலத்தின் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என அவர் விமர்சித்தார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகத் திருத்தப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது எனவும் தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பிறகு தொகுதிகள், சின்னம் குறித்து முடிவுசெய்யப்படும் என்று தெரிவித்தார்.
கமல், ரஜினி என யார் வந்தாலும் திமுக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியாது எனவும் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என உறுதிபடக் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் நினைவுத்தூண் அமைக்க இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்தார். சசிகலா வருகைக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலிலும், அதிமுகவிலும் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் வேல்முருகன் தெரிவித்தார்.