சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் பெங்களூரு ஐஐஎம் (IIM) நிறுவனத்தில் அரசு திட்டங்களுக்கு பயன்படும் வகையில் புள்ளி விவரங்கள் தொகுப்பது குறித்து இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2024-25 ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அரசு அலுவலர்களுக்கு தரவுப் பகுப்பாய்வு குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் எனவும், இதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் நிதித் துறையின் முதன்மைச் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதல்முறையாக பல்வேறு அரசுத் துறைகளின் புள்ளி விவரங்களை அறிவியல் முறையில் தொகுத்தல் குறித்து, பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (Indian Institute of Management (IIM Bangalore) "business analytics - science of data driven decision making" பிப்ரவரி 12ஆம் தேதி (இன்று) முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சிகளில் பங்கேற்பதற்காக பல்வேறு அரசுத் துறைகளிலிருந்து 25 அலுவலர்கள் தமிழ்நாடு அரசினால் அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் முதல்வரின் முகவரித் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை கூட்டுறவுத் துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, கருவூலம் மற்றும் கணக்குத் துறை, வணிகவரித் துறை, சென்னை மாநகராட்சி, பேரூராட்சிகள் இயக்ககம், பதிவுத் துறை, மின் பகிர்மானக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல் துறை மனிதவள மேலாண்மைத் துறை, தமிழ்நாடு குற்ற ஆவணக் காப்பகம், வேளாண் துறை ஆகிய துறைகள் சார்ந்த அரசு அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மீண்டும் தர்மமே வெல்லும்'... இபிஎஸ் மனு தள்ளுபடி! ஓபிஎஸ் வரவேற்பு! - EDAPPADI PALANISWAMI STAY ORDER
இப்பயிற்சிக்காக தமிழ்நாடு அரசு மொத்தம் 35 லட்சம் ரூபாய் நிதி ஒத்துகீடு செய்துள்ளது. தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் யாருக்கும் விடுபடாமல் கடைக்கோடி மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இப்பயிற்சி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.