திருவள்ளூர்: எல்லாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கோடுவள்ளி ஊராட்சியில் ஊராட்சி செயலர் பணி வேண்டும் என திருநங்கை தாட்சாயணி என்பவர் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணை வழங்க உத்தரவிட்டார். அதன்படி ஊரக வளர்ச்சித்துறையில் கிராம ஊராட்சி செயலராக தாட்சாயிணி நியமிக்கப்பட்டதற்கான பணி ஆணையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் வழங்கினார்.
இதனையடுத்து கோடுவள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராகுமார் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவிவேற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் கலந்து கொண்டு தாட்சாயணிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் ஊராட்சி செயலர் இருக்கையில் தாட்சாயணியை அமர வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பஞ்சாயத்து செயலாளர்; கடந்து வந்த வலி நிறைந்த பாதை!