டிக்-டாக் வீடியோவால், பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது. ஒரு 'லைக்'கிற்காக கவர்ச்சி ஆடையில் இருபாலரும், டிக்-டாக் மோகம் பிடித்து திரிகின்றனர்.
இதனால், அவர்களது வாழ்க்கையில் பல சர்ச்சைகள் எழுகின்றன. இது ஒருபுறம் இருக்க, டிக்-டாக்கில் இளைஞர் ஒருவர் கிராம பெண்களை அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர், தனது சகோதரியுடன், சமீபத்தில் டிக்-டாக் செயலியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரிந்த, பெயர் விலாசம் தெரியாத, நபர் ஒருவர், சுகந்தி, அவரது சகோதரி ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், அவர்கள் இருவரையும் கடுமையான வார்த்தைகளால் பேசியது மட்டுமல்லாமல், நாகலாபுரம் கிராம பெண்களையும் தகாத வார்த்தைகளால் பேசி விமர்சனம் செய்துள்ளார்.
இந்த வீடியோ வெளியானதால், கோபமடைந்த நாகலாபுரம் கிராமப் பெண்கள், பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் இதுசம்பந்தமாக புகாரளித்தனர். அந்தப் புகாரில், வீடியோ வெளியிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும், டிக்-டாக் வீடியோ செய்த இரண்டு பெண்களையும், ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக நாகலாபுரம் பகுதியினர் கூறுகையில், "கட்டுப்பாடு மிக்க எங்கள் ஊரில் இது போன்ற டிக்-டாக் வீடியோவால், கிராமத்தின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, டிக்-டாக் வீடியோ சர்ச்சையில் சிக்கியவர் சுகந்தி.
சுகந்திக்கும், அந்த நபருக்கும் தனிப்பட்ட பிரச்னைகள் இருக்கலாம். அதற்காக மொத்த கிராமத்தையும், பெண்களையும் இழிவாக பேசுவது தவறு. எனவே சம்பந்தபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இச்சம்பவத்தால், நாகலாபுரம் கிராம ஊர் பொது மக்கள் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட சுகந்தி, அவருடைய சகோதரி மற்றும் குடும்பத்தினரை ஊரை விட்டு தள்ளி வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கிராமப் பெண்களை இழிவாக பேசி டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட சம்பவம், தேனி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுபான கூடமாக மாறிய நூலகம் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!