தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கும், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கேரள எல்லையில் உள்ள, முல்லை பெரியாறு அணை வாயிலாக, தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 1600 கன அடி தண்ணீர் நாள்தோறும் திறந்துவிடப்பட்டு வருகிறது.
மேலும், தொடர் மழையின் காரணமாக அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருவதால் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. ஆற்றுக்கு திறந்த விடப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்புள்ளதால் முல்லைப்பெரியாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
அதன்படி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம், கூடலூர், உத்தமபாளையம், லோயர்கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்டோராக்கள் மூலமாகவும் ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகளை கட்டி அதன் மூலமாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் யாரும் ஆற்று பகுதியில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என காவல் துறையினர் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு!