திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான அறம்வளர்த்த நாயகியுடனாகிய ஐயாறப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 8ஆம் ஆண்டு குடமுழுக்கு (கும்பாபிஷேக) விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு ஆதிவிநாயகர், முருகன் பெருமான் வழிபாடும், 8 மணிக்கு ஆட்கொண்டார் பெருமானுக்கு வடமாலை சாத்தி அபிஷேகமும், 9 மணிக்கு மகாருத்ரஹோமம் தொடங்கி 10 மணிக்கு உச்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
11 மணிக்கு யாகசாலையிலிருந்து பூர்ணாஹீதி முடிந்து கடம் புறப்பட்டு 12 மணிக்கு சுவாமிக்கு பஞ்சமுக அர்ச்சனையும், அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.
மாலை மங்கள இசை, வீணை, வயலின் இசை நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து வேதபாராயணம், தேவார திருமுறை பாராயணம், கயிலை வாத்திய நிகழ்ச்சியுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் வீதி உலா காட்சி நடைபெற்றது.
மேல ராஜவீதியில் சிறப்பு கலை நிகழ்ச்சியும், வாணவேடிக்கையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: சீட்டு நடத்தி கூட்டாக ரூ.18 லட்சம் மோசடி: நடவடிக்கை கோரி புகார்