தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் நேற்று தொடங்கி ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கிய உடற்தகுதி தேர்வில் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சார்ந்த இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அழைப்பாணைகள் சரிபார்க்கப்பட்டு உயரம், மார்பளவு, ஓட்டம், மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. மைதானத்தில் தவறுகள் நடைபெறாமல் இருக்க டிஐஜி பிரதீப் குமார் தலைமையிலான குழுவினர் காணொலி பதிவுகள் மூலம் கண்காணித்து வருகின்றனர். சேலத்தில் நான்கு நாட்கள் நடைபெறும் உடற்தகுதி தேர்வில் 2,762 பேர் பங்கேற்கின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருந்து இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 3,502 பேரும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,282 பேரும் பங்கேற்க உள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கிய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் 644 பெண்கள் உள்பட 2,229 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வுகளை கண்காணிக்க காவலர் பயிற்சி பள்ளி டிஐஜி சத்யபிரியா மற்றும் சிறைத் துறை டிஐஜி பழனி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இதில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலிருந்து 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 917 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மேற்பார்வையில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகிறது.
வேலூர்:
வேலூரில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு - நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெற்றது. வேலூர் திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த 5,091 ஆண்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு நான்கு நாட்கள் மார்பளவு உயரம் சரிபார்த்தல், ஓட்டம், கயிறு ஏறுதல் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 627 பெண்கள் உட்பட 2,540 நபர்களுக்கான உடல் தகுதி தேர்வு நேற்று முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கண்ணன் முன்னிலையில் 450க்கும் மேற்பட்ட காவல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு தேர்வு பணியை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் 900 பேருக்கு தகுதி தேர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 815 பேர் பங்கேற்றுள்ளனர். வழக்கமாக தமிழ்நாடு அளவில் காவல் துறைக்கு பணியில் சேர தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களே அதிக அளவில் பங்கேற்பார்கள். கடந்த முறை 9,000 பேர் எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற நிலையில் இந்தமுறை குறைந்த அளவே தகுதி பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இரண்டாம் நிலை காலவர், மற்றும் ஜெயில் வார்டன்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் நடைபெற்றன. இந்த உடல் தகுதித் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 1,657 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 945 பேரும், விளையாட்டு பிரிவில் 39 பேர் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க: காவலரின் மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டுகள்!