பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டியின் மகன் சுரேஷ்குமார் (27). எம்பிஏ பட்டதாரியான இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டிலிருக்கும் 17வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளதால் அவரது பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக உள்ளதாகத் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து சென்றுள்ளனர். பின்னர், சிறுமியின் காதலன் சுரேஷ்குமார், கடந்த திங்கள்கிழமையன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு இறந்த நிலையில் ஏழு மாத சிசு பிறந்துள்ளது.
உயிரிழந்த சிசுவை எடுத்துச் சென்ற சுரேஷ்குமார் மருத்துவமனை அருகில் உள்ள ஏரிக்கரையில் புதைத்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும், குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் கோபிநாத் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆற்றுப்பாலத்திலிருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு!