நாகப்பட்டினம்: நாகூரில் உலகப் புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர்கள் எட்டு நபர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதில், பரம்பரை அறங்காவலர்களில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தர்காவை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களுக்குள் ஏற்பட்ட போட்டி மற்றும் முரண்பாடு காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற உத்தரவின் படி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் அலாவுதீன், ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.
நான்கு மாதங்களுக்கு மட்டும் இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள், கடந்த 5 ஆண்டுகளாக தர்கா நிர்வாகத்தை நடத்தி வந்தனர். இதையடுத்து, நாகூர் தர்கா இடைக்கால நிர்வாகிகள் அலாவுதீன், அக்பர் ஆகியோரை நீக்கம் செய்து, தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திடம் பொறுப்புகளை ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வக்ஃபு வாரியம் ஆய்வு
ஆனால், இடைக்கால நிர்வாகிகள் பொறுப்புகளை ஒப்படைக்காத நிலையில், நேற்று (பிப். 25) நாகூர் தர்கா அலுவலகம் வந்த தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் பரிதாபாணு தலைமையிலான நிர்வாக அலுவலர்கள், அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
தர்கா வளாகம், தர்கா கட்டுப்பாட்டில் உள்ள நாகூர் சந்தை போன்றவற்றில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்ட அவர்கள், கோப்புகளை ஆய்வு செய்து இடைக்கால நிர்வாகிகள் பயன்படுத்திய கோப்பு அலமாரிகள், பாதுகாப்புப் பெட்டகம், அவர்களின் அறை உள்ளிட்டவைகளைப் பூட்டி சீல் வைத்தனர்.
மேலும், நீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்பட்ட இடைக்கால நிர்வாகிகள் அலுவல் பணிகள் மேற்கொள்ளத் தடை விதித்ததுடன், தர்கா நிர்வாகத்தை தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின்கீழ் கொண்டு வர, வக்ஃபு வாரிய ஆய்வாளர் ஒருவரை நியமனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து, இடைக்கால நிர்வாகிகள் அக்பர், அலாவுதீன் ஆகியோர் பதவி வகித்த காலங்களில் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து, தர்கா மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களிடம் தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.