நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாரில் 2017ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பணிமனை கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பணி முடிந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பணியாளர்களான பிரபாகரன், மணிவண்ணன், தனபால், பாலு, ராமலிங்கம், சந்திரசேகர், முனியப்பன், அன்பரசன் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழக பணியாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து நாகப்பட்டினம் அரசுப்போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், நாகை மாவட்டமே ஸ்தம்பித்துப் போனது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 7.50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், இவர்களது இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி பொறையாரில் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. மவுன ஊர்வலமாக சென்று பொறையார் போக்குவரத்துக் கழக பணிமனையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உருவ படத்திற்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து உயிரிழந்தவர்களின் நினைவாக 8 மரக்கன்றுகள் பணிமனை இடத்தில் நடப்பட்டது.
இந்த நிகழ்வில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.