மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி, கடந்த 4ஆம் தேதி ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்கு இ-சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. சிறுமியை அவரது பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் சின்னப்பன் மகன் ராமச்சந்திரன்(21) என்பவர் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து காவல் துறையினர் சிறுதாவூர் சென்று சிறுமியை மீட்டதுடன் ராமச்சந்திரனை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ராமச்சந்திரனுக்கும், சிறுமிக்கும் இடையே சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதும், கடந்த மாதம் இருவரும் மயிலாடுதுறையில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்ததும் தெரியவந்தது. திருமணத்திற்கு பின்னர் சிறுமியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு ராமச்சந்திரன் சிறுதாவூர் சென்றுள்ளார்.
தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியை ராமச்சந்திரன் தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். விசாரணைக்கு பின்னர் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் ராமச்சந்திரனை கைது செய்தனர்.