மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா அருவாப்பாடி ஊராட்சி வை.பட்டவர்த்தி கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ராட்சத குழாய்களை இறக்குவதற்கான கிடங்கை ஏற்படுத்தி 9 ஆயிரம் ராட்சச குழாய்களை இறக்கி வைப்பதற்கான பணிகளை துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ராட்சத குழாய்கள் மிகப்பெரிய லாரிகளில் கொண்டு வந்து இறக்கி வருகின்றனர்.
திடீரென்று தங்கள் கிராமத்தில் ராட்சச குழாய்கள் இறக்கப்பட்டு வருவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாஸ் தலைமையில் பொதுமக்கள் ராட்சத குழாய் இருக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்த வித அறிவிப்பும் இன்றி இவ்வாறு நடப்பாதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ராட்சச குழாய்களை இறக்கி வருவதாக தெரிவித்தனர். உடனடியாக அந்த ராட்சச குழாய்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தங்கள் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என முழக்கமிட்டனர்.
ராட்சத குழாய்கள் இறக்குகிறோம் என்ற பெயரில் எண்ணெய் எடுக்கும் பணியை துவங்குவார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். குழாய்களை அப்புறப்படுத்த கோரி முழக்கமிட்டனர். ராட்சச குழாய்களை அப்புறப்படுத்தாவிட்டால் நாளை பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:இலங்கைத் தமிழர்களுக்கும் சம உரிமை - பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை