மயிலாடுத்துறை : தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் , மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
3 நாள்கள் கனமழை
இந்நிலையில்,3 நாள் மழையில் மயிலாடுதுறை அருகே பொன்னூர், பாண்டூர், மகாராஜபுரம், அருண்மொழித்தேவன் ஆகிய கிராமங்களில் மழை நீர் வடிய வழியின்றி ஆயிரத்திற்க்கும் பேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த மழையின் போது நீரில் மூழ்கிய பயிர்களை விவசாயிகள் நீரை வடியவைத்து அடியுரங்களை இட்டு காப்பாற்றி வரும் நிலையில், தற்போது மூன்றாவது முறையாக பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் பயிர்களில் விளைச்சல் குறைந்து பெரும் நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் வேதனையை தெரிவித்தனர்.
நீரில் மூழ்கிய சம்பா பயிர்
மேலும் இப்பகுதிக்கு, வடிகால் வாய்க்காலாக விளங்கும் எல்லை வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வார படாததே மழை நீர் வடியாததற்க்கு முக்கியக் காரணம் என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே எல்லை வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி வீணாகிவிட்டதால், அரசு அறிவித்துள்ள இடுபொருள் தங்களுக்கு தேவையில்லை என்றும், ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள் காண்போரை வாடச் செய்துள்ளது.
இதையும் படிங்க:Chennai Rain - பாத் டப்பை படகாக மாற்றிய மன்சூர் அலிகான்