மயிலாடுதுறை: சீர்காழி அருகே மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்து உள்ளது. கர்நாடக மாநிலம், குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு பல்லாயிரம் மைல்கள் கடந்து மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மேலையூரில் உள்ள இந்த கடைசி கதவணை வழியாக பூம்புகார் கடலில் சங்கமிக்கும்.
ஒவ்வொரு வருடமும் டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைகளுக்காக மேட்டூரில் இருந்து காவிரி நீர் திறக்கப்படும். அவ்வாறாக திறக்கப்படும் காவிரி நீர், இந்த கடைசி கதவணையை வந்தடையும். அந்த வகையில் இந்த ஆண்டும் மேட்டூரில் கடந்த ஜூன் 12ஆம் தேதி தமிழக முதலமைச்சரால் திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று கடைசி கதவணை வந்து அடைந்தது. காவிரி நீரை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் படையலிட்டும், மலர்த் தூவியும் வணங்கி வரவேற்றனர்.
இதையும் படிங்க: கடைமடைக்கு வந்த காவிரி நீர்.. 782 கன அடி தண்ணீர் திறப்பு!
இந்தக் கதவணையில் தண்ணீரைத் தேக்கி வைத்து ஒவ்வொரு பாசன ஆறுகளுக்கும், கிளை வாய்க்கால்களுக்கும் மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கும் முறை வைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் 3 ஆயிரத்து 57 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2 ஆயிரத்து 20 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
தண்ணீர் வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தண்ணீர் வந்தடைந்தது குறித்து விவசாயிகள், “முறைவைக்காமல் தண்ணீரைத் தொடர்ந்து வழங்க வேண்டும்” என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: நரிக்குறவ சமுதாயப் பெண் ஆசையாக அணிவித்த பாசிமணியை உடனே கழற்றிய அமைச்சர் உதயநிதி!